மத்திய அரசால் தமிழ் நாட்டிற்கு வழங்கப்படும் பொதுவிநியோகத் திட்டத்தில் மண்ணெண்ணெய் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே ரேஷன் கார்டு ஒன்றுக்கு 2 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கி வந்த நிலையில் மத்திய அரசு மண்ணெண்ணெய் அளவை குறைத்து வழங்கியதன் விளைவாக ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் அளவு குறைக்கப்பட்டது. கிராமப்புறங்களில் உள்ள ரேஷன் அட்டைதாரர்கள் சிலர் ரேஷன் கடைகளில் மாதம்தோறும் அரை லிட்டர் மண்ணெண்ணெய்தான் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழ்நிலையில், மத்திய அரசு மேலும் குறைத்து, மாநிலத்தின் தேவையில் அதாவது, ஒட்டுமொத்த
தமிழகத்திற்கே 20 சதவீதம் மட்டுமே மண்ணெண்ணெய் ஒதுக்கீடு செய்துள்ளதாக உணவு பொருட்கள் வழங்கல் துறை அதிரடியாக அறிவித்துள்ளது. இதனைத் அடுத்து ரேஷன் கார்டுகளுக்கான மண்ணெண்ணெய் அளவு
குறித்து விளம்பரப்படுத்த வேண்டும் என உணவு பொருள் வழங்கல் துறைக்கு தமிழக அரசு புதிய
உத்தரவிட்டுள்ளது. மண்ணெண்ணெய் வழங்கல் அளவு குறித்து தமிழக குடும்ப அட்டைதாரர்களிடம் இருந்து புகார்கள் பெறப்படுவதை தவிர்க்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாம்!