பிளஸ் 2 தேர்வு திட்டமிட்டபடி நடக்குமா? 15.04.2021 தலைமை செயலர் நடத்திய கூட்டத்தில் நடந்த
ஆலோசனை என்ன?
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது மற்றும் பிளஸ் 2
பொதுத்தேர்வை நடத்துவதா? ரத்து செய்வதா என்பது குறித்து, தலைமை செயலகத்தில் நேற்று அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில், கொரோனா 2-ஆம் அலை பரவல் நிலவரம், தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை, தடுப்பூசி நடைமுறைகள் குறித்து, விரிவாக விவாதிக்கப்பட்டது. பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் மே, 5ல்
பொதுத்தேர்வு நடத்தப்படுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மத்திய இடைநிலை கல்வி வாரியமான, CBSE., தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, தமிழக பிளஸ் 2 தேர்வுகளையும் தள்ளி வைக்க
வேண்டுமா?அதற்கான தேவையுள்ளதா என்று அதிகாரிகளிடம் கருத்து கேட்கப்பட்டது.
ஆந்திரா உட்பட மற்ற மாநிலங்களில், பிளஸ் 2 தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தப்படுவதை அதிகாரிகள் மேற்கோள்காட்டினர். கடந்த ஆண்டு அதாவது 2020 கொரோனா பரவல் துவங்கியிருந்த போதும், பிளஸ் 2 தேர்வுகளை மாணவர்களுக்கு பாதிப்பு இல்லாமால், உரிய காலத்தில் தமிழக பள்ளி கல்வித்துறை நடத்தி முடித்தது குறிப்பிடத்தக்கது ஆனால், சி.பி.எஸ்.இ., தரப்பில், கடந்த ஆண்டு தேர்வை தள்ளி வைத்து விட்டு, பின்
வேறு வழி இல்லாமால், கொரோனா பரவல் அதிகம் உள்ள காலத்தில், தேர்வை நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதையும் அதிகாரிகள் சுட்டிக் காட்டினர்.
திட்டமிட்ட தேதியில் பொதுத்தேர்வை முடித்து விட்டால், மாணவர்களுக்கும் பாடசுமை குறைந்து, உயர்கல்வி நுழைவு தேர்வுகளுக்கான பயிற்சி மற்றும் உயர்கல்விக்கான ஆயத்த பணிகளுக்கு செல்ல வசதியாக இருக்கும் என, அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர்.
பிளஸ் 2 மாணவர்களுக்கு, இன்று செய்முறை தேர்வுகள் துவங்குவதையும், அதிகாரிகள் எடுத்து கூறினர். இதையடுத்து, +2 பொதுத்தேர்வை செய்முறை தேர்வுகளை நடத்தி விட்டு, பிறகு சூழ்நிலைக்கு ஏற்ப ஆலோசித்து கொள்ளலாம் என, முடிவு செய்யப்பட்டதாக, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.