சுப தினங்களில் சொத்து ஆவணப் பதிவுக்கு கூடுதல் கட்டணம்; தமிழக அரசு ஒப்புதல்!
3 முக்கிய சுப தினங்களில் பத்திரப் பதிவு அலுவலகங்களைத் திறந்து ஆவணங்களைப் பதிவு செய்ய தமிழக அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. இந்த 3 தினங்களில் மேற்கொள்ளப்படும் ஆவணப் பதிவுகளுக்கு
கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த உத்தரவை, தமிழக அரசின் வணிக வரிபதிவுத் துறை முதன்மைச் செயலா் பீலா ராஜேஷ் பிறப்பித்துள்ளார்.
பதிவுத் துறையின் வருவாயைப் பெருக்கும் நோக்கத்தில், சித்திரை 1 தேதி (ஏப்ரல் 14), ஆடிப் பெருக்கு (ஆகஸ்ட்3), தைப் பூசம்(2021 ஆண்டு ஜனவரி 18) ஆகிய சுப தினங்களில் பத்திரப் பதிவு அலுவலகங்களைச் செயல்பாட்டில் வைக்கலாம் என்று பதிவுத் துறை தலைவரிடம் இருந்து பரிந்துரை பெறப்பட்டது. இந்த விடுமுறை தினங்களில் பத்திரப் பதிவு அலுவலகங்களைத் திறந்து வைக்கும்போது, கூடுதலாகக் கட்டணம்
வசூலிக்கவும் பதிவுத் துறை தலைவா் தமிழக அரசிடம் கோரியுள்ளார்.
அவரது கோரிக்கையைப் பரிசீலனை செய்ததில், 2021 கொண்டாடப்படும் சித்திரை முதல் தேதி, ஆடிப்பெருக்கு,தைப்பூசம் ஆகிய மங்களரமான 3 தினங்களில் பதிவு அலுவலகங்கள் திறந்து வைக்கப்பட்டு இருக்கும். இந்த நாள்களில் மேற்கொள்ளப்படும் ஆவணப் பதிவுகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள பதிவுத் துறை அலுவலகங்களில் ஆடிப்பெருக்கு, தைப்பூசம் போன்ற தினங்களில் அதிகளவு சொத்து ஆவணங்கள் பதிவு செய்யப்படும். இப்போது தைப்பூசம் அரசு பொது விடுமுறையாக
அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடிப்பெருக்கு தினத்தன்று பல்வேறு மாவட்டங்களில் உள்ளூா் விடுமுறை வழங்கப்படும்.
இந்த விடுமுறை தினங்கள் காரணமாக, பத்திரப் பதிவு அலுவலகங்களைத் திறந்து வைக்க முடியாத நிலை இருந்தது. தமிழக அரசின் இப்போதைய புது உத்தரவால் தைப்பூசம், ஆடிப்பெருக்கு போன்ற தினங்களில் பத்திரப் பதிவு அலுவலகங்கள் திறந்திருக்கும்.
தமிழக அரசின் புதிய உத்தரவின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் இன்று(ஏப். 14) பத்திரப் பதிவு
அலுவலகங்கள் திறந்திருக்கும். இதனால், சொத்து ஆவணங்களைப் பதிவு செய்வது உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளையும் மேற்கொள்ளலாம்.