திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தால்… – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
திருமணம் செய்யாமல் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்துவிட்டு, காதல் உறவில் பிரச்னை ஏற்படும் போது எழுப்பப்படும் குற்றச்சாட்டுகளை, பலாத்காரமாக கருத முடியாது என கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கேரள மாநிலம் புத்தன்குறிச்சியை சேர்ந்த வழக்கறிஞர் நவநீத் மற்றும் பெண் வழக்கறிஞர் ஒருவர், காதலித்த நிலையில், திருமணம் செய்யாமல் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்துள்ளனர். திருமணம் செய்வதாக ஏமாற்றி, பாலியல் பலாத்காரம் செய்ததாக அப்பெண் புகார் அளித்ததை அடுத்து, வழக்கறிஞர் நவநீத் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமின் கோரி நவநீத் தாக்கல் செய்த மனு மீது, கேரள உயர்நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டது. அப்போது, திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்துவிட்டு, பிறகு காதல் உறவில் பிரச்சினை ஏற்படும்போது கூறப்படும் குற்றச்சாட்டுகளை, பலாத்காரமாக கருத முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற குற்றச்சாட்டு எழுந்தால், அது வாக்குறுதி மீறலாக மட்டுமே பார்க்கப்பட வேண்டும் என்றும், பலாத்காரமாக பார்க்கக்கூடாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.