pmk ramadass

செல்வாக்கு; ஆதிக்கத்தை தக்க வைத்த பாமக 10 இடங்களில் முன்னிலை!

தமிழகத்தில் பாமக போட்டியிட்ட 23 தொகுதிகளில் 10 தொகுதிகளில் முன்னிலை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலை காட்டிலும் இந்த கட்சிக்கு தற்போது முக்கியத்துவம் அதிகம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. பாமக எனும் அரசியல் கட்சி சமூக மக்களின் முன்னேற்றத்திற்காக தொடங்கப்பட்ட ஒரு கட்சியாகும். மாம்பழம்
இக்கட்சியின் சின்னம். தமிழகத்தில் மிக முக்கிய தலைவர்களில் ஒருவர் இக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ்

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீட்டை காலம் காலமாக வலியுறுத்தி வந்த கட்சி பாமக. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த நிலையில் இந்த கோரிக்கையை ராமதாஸ் வலியுறுத்தினார்.

இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் எம்பி தேர்தலில் ராமதாஸுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த 7 தொகுதிகளிலும் பாமக தோல்வியடைந்தது. இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல் சட்டசபைத் தேர்தலிலும்
அதிமுகவுடன் கூட்டணி வைக்க பாமக அதிரடி முடிவு செய்தது.

ஆனால் அதற்கு முன்பாக வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு குறித்த கோரிக்கையை பாமக
வலுவாக கையில் எடுத்தது. பாமக சார்பில் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. இது தொடர்பாக ராமதாஸ், முதல்வரிடம் கோரிக்கை மனுவையும் அளித்திருந்தார்.

இதன் பலனாக கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத ஒதுக்கீடு அறிவிப்பு அறிவிக்கப்பட்டது. இதற்கு வன்னியர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது என்றே சொல்லலாம். பல ஆண்டுகால கோரிக்கை ஒரே நாளில் நிறைவேறியதை அடுத்து அன்புமணி ராமதாஸ்,
ராமதாஸிடம் ஆனந்த கண்ணீர் விட்டபடியே மகிழ்ச்சி பொங்க பேசினார் என்பது யாவரும் அறிந்ததே!

இதையடுத்து அதிமுக தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் பாமகவை முதலில் அழைத்து 23 ஒதுக்கீடு செய்தது. குறைந்த தொகுதிகள் என்றாலும் கூட இடஒதுக்கீடு கோரிக்கை நிறைவேறியதால் ஏற்றுக் கொள்கிறோம் என்றார் அன்புமணி.

இந்த சூழ்நிலையில் மயிலம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட மாசிலாமணியை காட்டிலும் அதிக வாக்குகள் பெற்று பாமகவின் சிவக்குமார் முன்னிலையில் உள்ளார்.ஜெயங்கொண்டம் தொகுதியில் பாமக வேட்பாளர் கே பாலு முன்னிலையில் உள்ளார். நெய்வேலி தொகுதியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் ஜெகன்
முன்னிலையில் உள்ளார்.

அது போல் ஆற்காட்டில் பாமக வேட்பாளர் இளவழகன் முன்னிலையில் உள்ளார். பென்னாகரம் தொகுதியில் ஜி கே மணி முன்னிலை வகித்து வருகிறார். தருமபுரி, காஞ்சிபுரம், மேட்டூர், சேலம் மேற்கு, சோளிங்கர் ஆகிய தொகுதிகளில் பாமக முன்னிலை வகித்து வருகிறது. இதற்கு காரணம் இவர்கள் போட்டியிட்ட தொகுதிகளில்
பெரும்பாலானவை வன்னியர் சமூகத்தினர் அதிகம் உள்ள தொகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

வன்னியர் சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டை பாமக பெற்று தந்ததால் இந்த முறை வாக்குகளை மக்கள் வாரி வழங்கியுள்ளதாகவே பார்க்கப்படுகிறது. 1990களை போல தமிழகத்தில் மீண்டும் பாமகவும் மிகப் பெரிய கட்சியாக உருவெடுத்து வருகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றே சொல்லலாம்.