பொதுத்துறை வங்கிகளின் இணைப்பு நடவடிக்கையின் காரணமாக பழைய வங்கியின் பெயரில் உள்ள காசோலைகள், வரும், ஏப்ரல் 1ம் தேதி முதல் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது!
பொதுத்துறை வங்கிகள் தற்போது சந்தித்து வரும் கடும் நெருக்கடியை சமாளிப்பதற்காக, வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை மத்திய அரசு படிப்படியாக நடைமுறைபடுத்தி வருகிறது.
தேனா வங்கி, விஜயா வங்கி ஆகியவை, பேங்க் ஆப் பரோடா வங்கி உடனும், கார்ப்பரேஷன் வங்கி, ஆந்திரா வங்கி யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுடனும் இணைக்கப்பட்டது.
ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் வங்கி இரண்டும் பஞ்சாப் நேஷனல் வங்கியுடனும், சிண்டிகேட் வங்கி கனரா வங்கியுடனும், அலகாபாத் வங்கி, இந்தியன் வங்கியுடனும் இணைக்கப்பட்டது.
ஆனாலும், வங்கி இணைப்புக்கு உள்ளான பழைய வங்கிகளின் காசோலைகள் இதுவரை ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்தன. அவை, நாளடைவில் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டு, புதிய வங்கியின் காசோலைகள் மட்டுமே இனி ஏற்றுக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், வரும், ஏப்ரல் 1ம் தேதி முதல்,
தேனா வங்கி,கார்ப் பரேஷன் வங்கி,விஜயா வங்கி, ஆந்திரா வங்கி, ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் வங்கி, சிண்டிகேட் வங்கி, அலகாபாத் வங்கி ஆகிய, 8 வங்கிகளின் காசோலைகள் செல்லாது என, மத்திய அரசு தற்போது அறிவித்து உள்ளது. எனவே, இந்த 8 வங்கிகளின் காசோலையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அனைவரும் புதிய வங்கியின் காசோலை புத்தகங்களை கேட்டுப் பெறும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த 8 வங்கிகளின் காசோலைகளை, இனி யாரும் பெறக்கூடாது. ஏற்கனவே பெற்றிருந்தால், அதை மாற்றி பெறும்படியும் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.